ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹே-வுக்கு பொது மன்னிப்பு வழங்கி தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் விடுவித்துள்ளார்.
நாள்பட்ட தோள்பட்டை மற்றும் முதுகு வலி காரணமாக பார்க் கியூன் ஹே இந்த ஆண்டு மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பார்க் கியூன் ஹே-வுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு முன்னர் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி மூன் ஜே-இன் நிராகரித்து வந்த நிலையில் நேற்று வெளியான இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு பார்க் கியூன் ஹே-வுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு 30வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தண்டனை குறைக்கப்பட்டது.
தென்கொரியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பார்க் சுங்-ஹீ கடந்த 1963 முதல் 1979 வரை அந்நாட்டின் சர்வாதிகாரி போல் ஆட்சி செலுத்தி வந்தார். கடந்த 1978-ஆம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது மறைவுக்கு சில ஆண்டுகளுக்கு பின்னர் அரசியலில் குதித்த பார்க் சுங்-ஹீ-யின் மகள் பார்க் கியூன் ஹே கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தென்கொரியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார். ஊழலற்ற ஆட்சியை வழங்குவேன் என்ற வாக்குறுதியுடன் ஆட்சியை கைப்பற்றிய பார்க் கியூன் ஹே குறுகிய காலத்தில் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கினார்.
பார்க் கியூன் ஹே-வின் நெருங்கிய தோழியான சோய் சூன் அரச விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகவும், அரசின் மிக முக்கிய இரகசிய கோப்புகளை ஆய்வு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
மேலும், ஜனாதிபதியுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்ததாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தின.
இதையடுத்து சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து ஜனாதிபதி பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 இலட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் நடைபெற்றது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்ட உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, பார்க் கியூன் ஹே-வை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்தது. அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்ததன் மூலம் 23 பில்லியன் வோன் (21.7 மில்லியன் அமெரிக்க டொலர்) சொத்து சேர்த்ததாக விசாரணை மூலம் நிரூபணமானது.
இதையடுத்து, இவ்வழக்கில் பார்க் கியூன் ஹே-வுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடியே 80 இலட்சம் வோன் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் இந்தத் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.